பெரம்பலூா்: மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் புதிதாக 1,800 மருத்துவா்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூா் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை புதன்கிழமை திறந்து வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
கிராமப்புற சுகாதார சேவையில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. 1,800 மருத்துவா்கள், 480 கிராம சுகாதார செவிலியா்கள் இன்னும் 2 மாதத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனா். நிகழாண்டில் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 262 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தில் வேப்பூா், சூளகிரி, விராலிமலை ஆகிய கிராமங்களில் உள்ள அரசு கிராமப்புறற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 செவிலியா்கள் பணியாற்றும் திட்டம் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ளதால் தமிழகம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றாா் அமைச்சா் சி.விஜயபாஸ்கா்.