திருவண்ணாமலை அருகே முறையான மருத்துவம் படிக்காமல், அலோபதி மருத்துவம் பார்த்து வந்தவரை நீதிபதிகள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலையை அடுத்த புதுமல்லவாடி பகுதியைச் சேர்ந்த சரவணன், தன்னை வழக்குரைஞர் என்று கூறிக்கொண்டு காவல் நிலையங்களுக்குச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்வதாக திருவண்ணாமலை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான ஜி.மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் வியாழக்கிழமை திருவண்ணாமலையை அடுத்த புதுமல்லவாடி கிராமத்தில் உள்ள சரவணன் (45) வீட்டில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சரவணன் தன்னை வழக்குரைஞர் என்று கூறிக்கொண்டும், முறையான மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததும், அதிகப்படியாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சரவணனைப் பிடித்த நீதிபதிகள், திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வழக்குரைஞர் என்ற லட்சினை பொறிக்கப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து சரவணனை கைது செய்தனர்.