அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மழை தொடரும்: பாலச்சந்திரன்
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழகக் கடற்கரையில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்து வரும் 3 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடரும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் பரவலாகவும் உள் பகுதிகளில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்கால், தரங்கம்பாடியில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாகவும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழைபெய்யக் கூடும்.
மீனவர்களைப் பொறுத்தவரை தெற்கு ஆந்திரா, தமிழகக் கடற்கரை பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு இன்று செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்துக்கு மழை தொடரும். மணிக்கு 30 - 40 கிலோ மீட்டர் வேகத்துக்குக் காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.