தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 9 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக, கரூர்பரமத்தியில் 105 டிகிரி வெப்பநிலை பதிவானது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உள்தமிழகத்தின் சில இடங்களில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்துகிறது. இதே நிலை செவ்வாய்க்கிழமையும் காணப்பட்டது.
9 இடங்களில் செவ்வாய்க்கிழமை வெயில் 100 டிகிரிக்கும் மேல் பதிவானது. அதிகபட்சமாக, கரூர்பரமத்தியில் 105 டிகிரியும் தருமபுரி, மதுரை விமானநிலையம், பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, திருத்தணி, வேலூரில் தலா 102 டிகிரியும், நாமக்கலில் 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: தமிழகம், புதுச்சேரியில் புதன்கிழமை (ஏப். 3) வறண்ட வானிலை நிலவும். உள் தமிழகத்தில் சில இடங்களில் வழக்கத்தைவிட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.