எதிர்க்கட்சிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்து வரும் தேர்தல் ஆணையம், அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டப் பேரவைத் தொகுதியிலுள்ள குஜிலியம்பாறையில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாக புதன்கிழமை நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் மேலும் அவர் பேசியது: குற்றவாளிகள், வழக்குகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் தேர்தலில் நிற்பதாக அமித் ஷா கூறியுள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது எந்த வழக்கும் நீதிமன்றத்தில் இல்லை.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, விதிமுறையை மீறி, குஜராத்தில் அமித்ஷா தலைவராக இருக்கக் கூடிய கூட்டுறவு சங்கத்தில் ரூ.770 கோடி முதலீடு செய்யப்பட்டது. அதில், அமித் ஷாவை முதல் குற்றவாளியாகச் சேர்த்திருக்க வேண்டும். வேலூர் தொகுதியில் திமுகவின் வெற்றியைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே, துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. ஆனால், தமிழகத்திலேயே அதிகப் பணப் புழக்கம் நடைபெறும் தேனி மக்களவைத் தொகுதிக்கு வழி தெரியாமல் தேர்தல் ஆணையம் தவித்துக் கொண்டிருக்கிறதா?, அங்குள்ள மாவட்ட ஆட்சியர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆளும்கட்சிக்கு ஒரு பரிவு, எதிர்க்கட்சிக்கு ஒரு எதிர்ப்பு, என்ற நிலையை எடுத்தால், தேர்தல் ஆணையம் அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும். நாட்டின் பாதுகாப்பு, காங்கிரஸ் ஆட்சியில் தான் சிறப்பாகவும், உறுதியாகவும் இருக்கும். நாட்டை ஒற்றுமைப்படுத்தும் உணர்வு பாஜகவுக்கு கிடையாது. ராணுவம் தொடர்பான கோப்புகளை கூட காக்க முடியாத மோடி, நாட்டை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்றார்.