மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக, ஏப்ரல் 12-இல் தமிழகம் வரும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 4 இடங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ராகுல் காந்தி, ஏப்ரல் 12-ஆம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது சேலம், தேனி, கிருஷ்ணகிரி, விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.
ராகுல் பங்கேற்கும் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். பிரதமர் மோடி கோவையில் பேசும்போது, சரக்கு சேவை வரி பிரச்னைகளைச் சரி செய்வேன் என்று கூறியுள்ளார். இதைத்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் கூறினர். அப்போது, அந்த ஆலோசனைகள் முட்டாள்தனமானது என்று மோடி கூறினார். ஆனால், இப்போது சரி செய்கிறேன் என்று கூறுகிறார். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைப்போம் என்று கூறி இருப்பதை ரஜினி தெரிந்து ஆதரித்தாரா அல்லது தெரியாமல் ஆதரித்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைப்பது சாத்தியமில்லை என்றார்.