சென்னை: வங்கக் கடலில் வரும் 29ம் தேதி புயல் சின்னம் உருவாகும் என்றும், இது சென்னை - நாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 25ம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது 26ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். அடுத்த 2 நாட்களில் இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து புயலாக வலுவடையும்.
புயல் சின்னமாக வலுவடைந்து, 29ம் தேதியில் இருந்து தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும். இந்த புயல் சின்னம் தமிழகக் கடற்கரையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் சின்னம் சென்னைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஆத்தூர் - 10 செ.மீ. தம்பட்டி, தேனி ஆகிய பகுதிகளில் 6 செ.மீ., திருவண்ணாமலை 5 செ.மீ. மழை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களான ஈரோடு, சேலம், கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.