வங்கக் கடலில் உருவாகி திங்கட்கிழமை மாலை அதி தீவிர புயலாக மாறிய ஃபானி புயல், அடுத்த 24 மணி நேரத்தில் மிக அதித்தீவிரப் புயலாகவும், அதன்பிறகு 24 மணி நேரத்தில் மிக மிக அதித்தீவிரப் புயலாகவும் உருமாற உள்ளது.
இது தற்போதைய நிலவரப்படி ஒடிஸா கடற்கரையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது புதன்கிழமையன்று மிக மிக அதித்தீவிரப் புயலாக மாறவிருப்பதால் கடற்கரையோர மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் வரவழைக்கப்பட்டு, இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஃபானி புயலானது வடக்கு - வடமேற்காக கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
நாளை அதாவது மே 1ம் தேதி மாலைக்குப் பிறகு இது தனது பாதையை மாற்றுகிறது. அதாவது தற்போது வடக்கு - வடமேற்காக நகர்ந்து வரும் நிலையில் நாளை மாலைக்குப் பிறகு வடக்கு - வடகிழக்காக தனது பாதையை ஒடிஸா கடற்கரை நோக்கி மாற்ற உள்ளது.
இந்த புயல் சின்னத்தால் ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகளிலும், தெற்கு ஒடிசாவின் கடற்கரைப் பகுதிகளிலும் வியாழக்கிழமை கன மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல, ஆந்திராவின் வடகடற்கரைப் பகுததிகளில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஃபானி புயல் கடந்து செல்லும் கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஃபானி புயலானது மே 3ம் தேதி ஒடிஸாவில் கரையைக் கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.