தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பானி புயல் மேலும் வலுவடைந்து, அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.
செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி, சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. 16 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வருகிறது.
புதன்கிழமை மாலை (மே 1) வடதமிழகம்-தெற்கு ஆந்திரக் கடற்கரை அருகில் 300 கி.மீ. தொலைவு வரை வந்து, அதன்பிறகு, வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிஸா கடற்பகுதியை நெருங்கும் என இந்திய வானிலை மையம் மையம் தெரிவித்துள்ளது.
வடதமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில்,
ஃபானி புயல் அதி தீவிர புயலாக மாறி, சென்னைக்கு 575 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. குமரி, மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழக கடலோர கடற்பகுதிகளில் காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்திலும், சமயத்தில் 50 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
மீனவர்கள் இன்றும், நாளையும் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.