குளிர்பான பாட்டிலில் பாலித்தீன் தாள் இருந்த விவகாரத்தில் கோககோலா நிறுவனத்துக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து கோவை நுகர்வோர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கோவை, சி.எம்.சி. காலனியைச் சேர்ந்தவர் பூர்ணிமா. இவர் கடந்த 2014 -ஆம் ஆண்டில் தனது வீட்டின் அருகே உள்ள மளிகைக் கடையில் 200 மில்லி கோககோலா குளிர்பானத்தை ரூ.12 }க்கு வாங்கியுள்ளார். அந்த பாட்டிலில் பாலித்தீன் தாள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக மளிகைக் கடைக்காரரிடம் புகார் அளித்தார். ஆனால் பூர்ணிமாவின் புகாரை கடைக்காரர் அலட்சியப்படுத்தியதாகக்
கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த பூர்ணிமா இதுகுறித்து கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நுகர்வோர் ஆணையத் தலைவர் பாலச்சந்திரன் இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
அதன்படி தரமற்ற வகையில் குளிர்பானம் தயாரித்த கோககோலா நிறுவனத்துக்கு ரூ.75 ஆயிரமும், அதைப் பரிசோதிக்காமல் விற்பனை செய்த மளிகைக் கடைக்காரர் ஜவஹர் ராஜுவுக்கு ரூ.25 ஆயிரமும், மனுதாரரின் வழக்கு செலவுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரரின் கோரிக்கையின்படி கோககோலா நிறுவனம் வழங்க வேண்டிய அபராதத் தொகையில் அப்பகுதியில் உள்ள 100 ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஒரு மாதத்துக்கு பழங்கள், சத்துப் பொருள்களை வாங்கி வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.