கீழடியில் மிக நீண்ட கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு
கீழடியில் 2015-இல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இதை பரிசோதித்ததில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது தெர
கீழடியில் 2015-இல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இதை பரிசோதித்ததில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, மத்திய தொல்லியல் துறை சார்பில் 2 மற்றும் 3-ஆம் கட்ட அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர், மத்திய தொல்லியல் துறை தனது அகழாய்வுப் பணியை அத்துடன் நிறுத்திக் கொண்டது.
இதையடுத்து, தமிழக தொல்லியல் துறை 4-ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. தொடர்ந்து 5-ஆம் கட்ட அகழாய்வு, ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது. இதற்காக தமிழக அரசு ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
Advertisement
இந்த அகழாய்வுப் பணிகள், தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 பேரின் நிலங்களில் 27 இடங்களில் அகழாய்வுக்காக தோண்டப்பட்டுள்ளன.
இவற்றிலிருந்து மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருள்கள், செப்புக் காசுகள், உணவுக் குவளை உள்ளிட்ட 675 -க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த அகழாய்வில் அதிகளவில் பலவகை சுவர்களும் கண்டறியப்பட்டுள்ளன.
அந்த வகையில், வித்தியாசம் போதகுரு என்பவரது நிலத்தில், அகழாய்வு நடந்த போது, சுவர் ஒன்று தென்பட்டது.
தொடர்ந்து நடந்த அகழாய்வில், அந்த சுவர், முருகேசன் என்பவரது நிலம் வழியாக, கிழக்குப்பகுதி வரை நீண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுவரை முழுமையாக கண்டறிய, ஒரு வாரமாக அகழாய்வு நடந்தது. இது நீண்ட கோட்டைச் சுவராக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது
மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கண்டறியப்பட்ட சுவரை விட, இந்த சுவர் வித்தியாசமாக உள்ளது.நவீன கட்டுமானம் படுக்கை வசத்தில், செங்கற்களை ஒரு வரிசையாகவும் உயரவாக்கில், ஒரு வரிசையாகவும் வைத்து, கட்டடம் கட்டியுள்ளனர்.மேலும், சுவர் சாயாமல் இருக்க, உயர வரிசை செங்கற்களுக்கு நடுவே, படுக்கை வசத்திலும், செங்கற்கள் வைக்கப்பட்டுள்ளன. சுவரின் தன்மையை காணும் போது, படைக்கலன் தங்கியிருக்கும் இடத்தின் பாதுகாப்பு சுவராக இருக்க வாய்ப்புள்ளதாக, தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.
இந்த சுவர், முருகேசன் நிலத்தில் இருந்து, கிழக்கு பகுதி வரை நீண்டுள்ளது. எனவே, அந்த நிலத்திலும், அகழாய்வை தொடரும் பட்சத்தில், சுவற்றின் முழு பரிமாணத்தையும் கண்டறிய வாய்ப்பு உள்ளது. சுவரின் முழு அளவையும் கணக்கெடுத்து, தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளனர்.