அதிமுக ஆட்சியில் 3ஆவது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஒண்டி வீரனின் 248ஆவது நினைவு தினத்தையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆங்கிலேய தளபதியை போராடி வெற்றி கண்டவர் ஒண்டி வீரன். எந்த மாநிலத்தில் பிரச்சினை ஏற்பட்டாலும் திமுக துணை நிற்கும், அதே போல்தான் காஷ்மீர் விவகாரத்திலும் திமுக போராட்டம் அறிவித்துள்ளது. நாங்குநேரி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு திமுக போட்டியிடுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
அதிமுக ஆட்சியில் பால் விலை 3-ஆவது முறையாக உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை உயர்வால், பால் விலை உயர்வு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பால்வளத்துறை லாபத்தில் இயங்குவதாக கூறும்போது, பால் விலை உயர்வு ஏன்? பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.