வேலூர்: கடவுளைப் போலவே ரஜினிக்கும் ஒரு 'பவர்' உள்ளது என்று ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவில் இயக்குநர் பாரதிராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வேலூரில் வரவிருக்கும் ரஜினிகாந்தின் 70-ஆவது பிறந்தநாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிறன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி தானு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார். நிகழ்வில் பாரதிராஜா பேசியதாவது:
ரஜினியின் அரசியல் குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை. எனக்கும் அவருக்கும் 48-ஆண்டு கால நட்பு உள்ளது. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு பவர் உள்ளது. ஐயப்பன் கோவிலுக்கு என்று ஒரு பவர் உள்ளது. மதுரை மீனாட்சி அம்மனுக்கு என்று ஒரு பவர் உள்ளது. எல்லா அம்மனும் மீனாட்சி ஆகி விட முடியாது. அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்துக் காணப்படுகிறது.
அதேபோல் மனிதர்களுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. அது அவரவருக்கான தனித்தன்மை . எல்லா மனிதர்களும் பாரதிராஜா ஆகிவிட முடியாது. எல்லாரும் ரஜினி ஆகிவிட முடியாது . அதேபோல ரஜினிக்கும் ஒரு பவர் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.