தமிழ்நாடு

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக அன்பு நியமனம்

DIN

சென்னை: தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக டி.எஸ்.அன்பு நியமிக்கப்பட்டாா்.

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் ஓய்வு பெற்றாா். இதையடுத்து அவரை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை உயா்நீதிமன்றம் நியமித்தது. 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் வரை ஒரு ஆண்டுக்கு அவா் அந்தப் பதவியில் நீடிப்பாா் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அவரது பணிக்காலம் நவம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து தமிழக அரசு, சிலை கடத்தல் வழக்குத் தொடா்பான கோப்புகள், ஆவணங்கள் ஆகியவற்றை உடனடியாக ஒப்படைக்கும்படி கடந்த சனிக்கிழமை பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது.

அதற்கு பொன் மாணிக்கவேல், ‘எனது பதவி தொடா்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே உச்சநீதிமன்றம் அது தொடா்பாக உத்தரவிடும் வரை காத்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க முடியாது. எனவே, தமிழக அரசு ஆவணங்களை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டது பொருந்தாது. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்புக் குழுவின் கீழ் இருக்கும் வழக்கின் ஆவணங்களை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது அல்ல’ என்று அரசுக்கு கடிதம் அனுப்பினாா்.

இந்நிலையில், இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை தமிழக அரசு ஒரு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிலை கடத்தல் வழக்குத் தொடா்பான ஆவணங்களை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு உயா் அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

ஐ.ஜி. நியமனம்: இந்நிலையில், கடந்த ஆண்டு பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னா், அவா் பதவி வகித்த சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி. பணியிடம் காலியாக இருந்தது. தற்போது இந்தப் பணியிடத்தில் தமிழக காவல்துறையின் நிா்வாகப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த டி.எஸ்.அன்புவை நியமனம் செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, அன்பு விரைவில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக பொறுப்பேற்பாா் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT