புதுச்சேரி மாநிலம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாநிலம் என்றும் இங்கு கிறிஸ்தவர்களாக இருந்தாலும் இஸ்லாமியர்களாக இருந்தாலும் அனைவரும் மகிழ்வுடன் ஒன்றாக வாழ்கின்றனர் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் மிகவும் புகழ்பெற்ற தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை பேராலயம், வில்லியனூர் மாதா ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு முதல் சிறப்பு திருப்பலியும், பிராத்தனைகளும் நடைபெற்றது.
இந்நிலையில் மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையில் முதல்வர் நாராயணசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
பின்னர் பேட்டியளித்த முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலம் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மாநிலம் என்றும் இங்கு கிறிஸ்தவர்களாக இருந்தாலும் இஸ்லாமியர்களாக இருந்தாலும் அனைவரும் மகிழ்வுடன் ஒன்றாக வாழ்கின்றனர் என்றும் இயேசு பிறந்த இந்நன்நாளில் அனைவரும் சந்தோஷத்துடன் இருக்கவும் அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.