தமிழறிஞர் நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பாஜகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவருக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.
நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவதூறாகப் பேசியதற்காக தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், பாஜகவினர் நெல்லை கண்ணன் இல்லத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பெருமதிப்பிற்குரிய அப்பா தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு சனநாயகத்தின் வழியே பாசிசத்தை கட்டமைக்க முயலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கொடுங்கோல் ஆட்சி முறைக்கெதிரான அறச்சீற்றமே.!
நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, மதத்தால் நாட்டைத் துண்டாட முயலும் பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பதே அப்பேச்சின் நோக்கம். அது வன்முறையைத் தூண்டுவதாக கைது செய்யக்கோருவது அறிவிலித்தனமானது.
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தனிநபரல்ல! ஒட்டுமொத்த தமிழர்களின் சொத்து!' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.