சென்னை: தமிழக அரசின் 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி 2 ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதில் உரையுடன் ஜனவரி 8 ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் முடிவடைந்தது.
இந்த நிலையில், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியதும் 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
அலைவீசும் கடலோரம் துயில் கொண்டு இலைவீசும் இயக்கத்தை வாழ்த்தி வழிநடத்திக் கொண்டிருக்கும் தெய்வம் ஜெயலலிதா, மும்முறை செங்கோலை தன்னிடம் வழங்கிய குலதெய்வம் என்றும், அதிமுக நல்லாட்சியின் காவல்தெய்வம் என்றும் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டி நிதிநிலை அறிக்கையை வாசிக்க தொடங்கினார் ஓபிஎஸ்.
தமிழ் பண்பாட்டை காப்பாற்ற உறுதியாக உள்ள இந்த அரசு, யுனெஸ்கோ தயாரித்துள்ள செல்வாக்குள்ள மொழி பட்டியலில் தமிழ் 14வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் தமிழை 10வது இடத்திற்கு கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. ஹார்வார்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டுள்ளது. பிற சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார்.