சென்னை: அவசியமில்லாமல்,தேவையில்லாமல் தி.மு.க.-வை கமல் விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஞாயிறன்றுஅவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மதச்சார்பற்ற கொள்கைக்கு ஆதரவாளராக, சனாதன எதிர்ப்பாளராக, இடதுசாரி சிந்தனையாளராக தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்ட மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் அவர்கள் பா.ஜ.க., அ.தி.மு.க. மீதான எதிர்ப்பு வாக்குகள் சிதறக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தான், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் அவர் இணைய வேண்டும் என்று தலைநகர் தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் கருத்து கூறினேன்.
அந்தக் கருத்தை நான் கூறும்போது, தி.மு.க.-வை அவர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது என் கவனத்திற்கு வரவில்லை. கமல்ஹாசன் அவர்கள் இத்தகைய விமர்சனம் செய்திருப்பது தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.-வுக்கு உதவுமே தவிர, அவர் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்பட்ட எந்த கொள்கைகளுக்கும் உதவாது. அவர் அவசியமில்லாமல், தேவையில்லாமல் தி.மு.க.-வை விமர்சித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்ப்பற்ற கூட்டணி தான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.