எம்சாண்ட் உற்பத்தியை ஊக்கப்படுத்த நடவடிக்கை
எம்சாண்ட் மணல் உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எம்சாண்ட் மணல் உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசியது:
மணல் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மணல் விற்பனையால் லாபம் பெறுபவர்கள் யார், அவர்களுக்கு அனுமதி கொடுத்தது யார்? என்றார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டுக் கூறியது:
மணலை மக்களுக்கு அரசே விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மணலைத் தனியாருக்கு விற்க அனுமதி கொடுக்கவில்லை. புதிய குவாரிகளைத் திறக்கும்போது சில நேரங்களில் நீதிமன்றங்களில் தடையாணை பெற்று விடுகிறார்கள். அதனால், தமிழகத்தில் ஆற்றுப்படுகையில் இருக்கும் மணலை அள்ள முடியாத சூழல் ஏற்பட்ட காரணத்தில்தான், வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் விடப்பட்டு, அந்தப்பணி நிறைவு பெற்று, இப்பொழுது வெளிநாட்டிலிருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு சென்னையிலே விநியோகிக்கப்பட்டு வருகிறது.
எந்த இடத்தில் மணல் விலை அதிகமாக இருக்கிறது என்று உறுப்பினர் சுட்டிக் காட்ட வேண்டும்.
மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயக் கூடிய சூழ்நிலை கூட இன்றைக்கு நீதிமன்றத்தினுடைய தீர்ப்பினால் அமைந்திருக்கிறது.
எனவே, பொத்தம் பொதுவாக சொல்லக்கூடாது. எந்த இடத்தில், இப்படிப்பட்ட பிரச்னை நடைபெறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டினால், அங்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
கே.ஆர்.ராமசாமி: சிவகங்கையில் ஒரு லோடு மணல் ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரம் வரைக்கூட விற்கப்படுகிறது. ஆனால், அரசு ஒரு லோடு மணல் ரூ.1,200 என்று கூறுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: மணலை அரசேதான் விற்கிறது. தனியாருக்கு விற்க அனுமதிப்பது இல்லை. மணல் தட்டுப்பாட்டைப் போக்கத்தான் எம்சாண்ட் உற்பத்தியை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். படிப்படியாக எல்லாக் கட்டடங்களையுமே எம்சாண்ட் மூலம் கட்டக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.