நாகூர் கந்தூரி விழா: நாளை சந்தனக் கூடு ஊர்வலம்
நாகூர் ஆண்டவர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம் வெள்ளிக்கிழமை (பிப். 14) நடைபெறுகிறது.
நாகூர் ஆண்டவர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம் வெள்ளிக்கிழமை (பிப். 14) நடைபெறுகிறது.
ஆன்மிக மகிமைகளால் உலகப் புகழ் பெற்ற தர்காக்களுள் ஒன்றாகவும், மதங்களைக் கடந்து மனிதம் போற்றும் வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது நாகூர் ஆண்டவர் தர்கா. இந்த தர்காவின் கந்தூரி விழாவில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம். இதன்படி, நாகூர் தர்காவின் 462-ஆம் ஆண்டு கந்தூரி விழா, பிப். 6-ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் வெள்ளிக்கிழமை மாலை நாகையிலிருந்து தொடங்கி நடைபெறவுள்ளது. சந்தனக் கூடு ஊர்வலத்தின் நிறைவில், சனிக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் நாகூர் ஹஜரத்து ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையொட்டி, சந்தனக் கூடு அலங்கார அமைப்பின் தயாரிப்புப் பணிகள் நாகையில் நடைபெற்று வருகிறது. நாகூர் ஆண்டவரின் புனித ரவுலா ஷரீபுக்கான சந்தனம் அரைக்கும் பணி நாகூரில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு சார்பில், வனத் துறை மூலம் அளிக்கப்பட்ட 20 கிலோ சந்தனக் கட்டைகளைக் கொண்டு, சந்தனம் தயாரிக்கப்படுகிறது.