முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்கள் சாலையில் செல்பவர்களா?: அமைச்சர் சம்பத் ஆவேசம்
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்கள் எல்லாம் சாலையில் செல்பவர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு தொழில் துறை அமைச்சர் சம்பத் எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமாகப் பேசினார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்கள் எல்லாம் சாலையில் செல்பவர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு தொழில் துறை அமைச்சர் சம்பத் எதிர்ப்பு தெரிவித்து ஆவேசமாகப் பேசினார்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசியது:
இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, ரூ.3.41 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்றும், 10.4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்றும் கூறியுள்ளீர்கள். உண்மையிலேயே இவையெல்லாம் நடந்தால் முதலில் மகிழ்ச்சி அடைபவன் நானாகத்தான் இருப்பேன்.
முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, ரூ.2.42 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும், 4.7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறினீர்கள். இதில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது எனத் தெரியவில்லை. இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கோரி வருகிறார். அதை வெளியிட வேண்டியதுதானே என்றார்.
அப்போது அமைச்சர் சம்பத் கூறியது:
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 64 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. 1.17 லட்சம் பேருக்கு வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. இதை நானே தெரிவிக்கிறேன்.
இதில், எதற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்? இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்கள் எல்லாம் சாலையில் சென்றவர்கள். கழுத்துப்பட்டியைக் கட்டிக் கொண்டு மாநாட்டில் பங்கேற்கச் செய்துள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் தரக்குறைவாக பேசியுள்ளார். வேணுசீனிவாசன் உள்பட பல்வேறு தொழிலதிபர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். அவர்களை எல்லாம் அப்படிச் சொல்ல முடியுமா?
கருணாநிதியின் புகழஞ்சலிக் கூட்டத்தில்கூட பல்வேறு தொழிலதிபர்கள் பங்கேற்றனர். அவர்களை எல்லாம் அப்படிக் கூற முடியுமா? எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் இப்படியெல்லாம் பேசக்கூடாது என்றார். அதன்பின், சில கருத்து பரிமாற்றங்களுக்குப் பிறகும் அமைச்சர் சம்பத், முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்கள் குறித்து ஸ்டாலின் கூறிய கருத்தையே தெரிவித்தார்.
அதற்கு துரைமுருகன், சாலையில் போகிறவர்கள், சாலையில் போகிறவர்கள் என்று அமைச்சர் கூறுகிறார். அப்படியென்றால் சாலையில் போகிறவர்கள் அவ்வளவு கேவலமா? என்றார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுந்து கூறியது:
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் (துரைமுருகன்) சாமர்த்தியமாக பேசுகிறார். உங்கள் கட்சியின் தலைவர் கூறிய கருத்து குறித்துதான் அமைச்சர் கூறுகிறார் என்றார்.
இந்த விவாதம் நடைபெற்றபோது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவையில்தான் இருந்தார். அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.