பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா பேசும்போது அரங்கிற்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. அரங்கில் பாதுகாப்புக்கு இருந்த காவல் துறையினர் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் வெளியேற்றப்பட்டனர். கூட்டத்தில் அமித்ஷா பேசியதாக பின்னர் கட்சி வட்டாரங்கள் கூறியது:
மக்களவைத் தேர்தலில் வலுவான கூட்டணியை பாஜக அமைத்திருக்கிறது. 5 தொகுதிகள் மட்டும்தான் நமக்கு கிடைத்திருக்கிறது என யாரும் சோர்ந்துவிட வேண்டாம். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்காக உழைக்க வேண்டும். இன்னும் 5 ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறும். அப்போது நமது கை ஓங்கியிருக்கும்; நாம் நினைத்தது நடக்கும்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியைக்காட்டிலும் விலைவாசி தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. பாஜக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று வாக்குச் சேகரிக்க வேண்டும் என அமித்ஷா பேசியதாக தெரிவித்தனர்.