ஜனநாயகத்தை பலவீனப்படுத்த காங்கிரஸ் முயற்சி: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு
நாட்டின் ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருவதாக
நாட்டின் ஜனநாயகத்தை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.
பிரியங்கா காந்திக்கு கட்சிப் பொறுப்பு அளித்திருப்பது காங்கிரஸில் நிலவி வரும் குடும்ப ஆதிக்கத்தின் பிரதிபலிப்பு என்றும் அவர் கூறினார்.
சென்னை வந்துள்ள நிர்மலா சீதாராமன், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு புதன்கிழமை சென்றார். மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
பச்சிளம் குழந்தைகள் பிரிவுக்குச் சென்று பார்வையிட்டார். அரை மணி நேரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் அவர் இருந்தார்.
மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நகர்ப்புற மருத்துவத் திட்ட இயக்குநர் உமா மகேஸ்வரி, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி, குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அரசர் சீராளர் ஆகியோர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது:
ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஏறத்தாழ 1,400-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறமுடியும். மத்திய அமைச்சர்கள் எங்கு சென்றாலும் அங்குள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று இத்திட்டம் செயல்படும் விதம் குறித்து ஆய்வு செய்கின்றனர். அதன்படி, நானும் இந்த மருத்துவமனையைப் பார்வையிட்டுள்ளேன்.
காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டிருப்பது, அக்கட்சியில் உள்ள குடும்ப அரசியல் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதையே உணர்த்துகிறது. கட்சிக்காக உழைத்தவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும், ஒரு குடும்பத்துக்கு மட்டுமே காங்கிரஸில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகம் இப்படியிருக்கும் நிலையில், வெளிநாடுகளில் இந்தியாவின் ஜனநாயக மாண்பைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அக்கட்சி இறங்கி வருகிறது. அதாவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்ற தவறான பிரசாரத்தை வெளிநாடுகளிலும் அக்கட்சி மேற்கொண்டு வருகிறது.
அப்படியானால், அண்மையில் நடந்த மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி முறைகேடு செய்தா வெற்றி பெற்றது? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
ரஃபேல் போர் விமான கொள்முதல் நடவடிக்கையில் எந்த தவறும் நடைபெறவில்லை. ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக அதை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி பொய்களைப் பரப்பி வருகிறது.
ரஃபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு எந்த அவசியமும் இல்லை என்றார் அவர்.