சென்னை: தேர்வு நேரம் என்பதைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மட்டுமாவது பணிக்கு திரும்ப முடியுமா? என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியு ள்ளார்.
கடந்த 22-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் ஆசிரியர்கள்கள் போராட்டம் தொடர்பான பொதுநல வழக்கு ஒன்று திங்களன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில்; விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருபாகரன் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். அவர் கூறியதாவது:
ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்தால் அடுத்த தலைமுறை பாதிக்கப்படும். நீங்கள் போராட்டம் நடத்துவதற்கு தேர்வுகாலம் தான் சரியான நேரமா ? மாணவர்கள் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறையில்லையா? சாலையில் இறங்கி போராடுவது ஆசிரியர்களுக்கு அழகல்ல.
மற்ற மாநிலங்களில் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறதா? தனியார் பள்ளியில் பயிலும், அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கக்கூடாது என கூறினால் ஏற்பீர்களா?
ஸ்விகி உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனத்தில் பட்டதாரிகள் பலர் பணியாற்றி வருகின்றனர்.
உயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு எத்தனை பட்டதாரிகள், பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கிறார்கள் தெரியுமா?.
அரசியல்வாதிகளை வசைபாடும் ஆசிரியர்கள் தங்கள் செயல்பாடுகளை உணர்ந்து பார்க்க வேண்டும். வேலைநிறுத்தம் செய்யும் சங்க நிர்வாகிகள் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்களை வசைபாடுவது சரியா?.
உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றாலும் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை வலியுறுத்துகிறேன்.
தேர்வு நேரம் என்பதைக் கருத்தில் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மட்டுமாவது பணிக்கு திரும்ப முடியுமா? இதுகுறித்து நாளை மதியம் பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து வழக்கினை ஒத்திவைத்தார்.