காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க எம்.எல்.ஏ.க்கள் வருமாறு பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இந்து சமய அறநிலையத் துறை தொடர்பான கேள்விக்குப் பதிலளிப்பதற்கு முன்பாக அமைச்சர் ராமச்சந்திரன் பேசியது: நீருக்கு அடியில் உள்ள அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடந்த 1979-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் அரிய நிகழ்வு நடைபெற்று வருகிறது.
ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை அத்திவரதர் தரிசனம் நடைபெறவுள்ளது. எனவே, அத்திவரதரை, உறுப்பினர்கள் அனைவரும் சென்று தரிசித்து ஆசி பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.