எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள இரண்டு சிறப்பு நீதிமன்றங்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹிலராமாணீ புதன்கிழமை திறந்து வைத்தார்.
எம்.பி, எம்எல்ஏக்கள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
கடந்த மாதம் வரை தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் இந்த சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அந்தந்த மாவட்ட எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை அங்குள்ள மாவட்ட முதன்மை நீதிபதி விசாரிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடர்ந்து, சென்னையைத் தவிர தமிழகத்தின் மற்ற மாவட்ட வழக்குகள் அனைத்தும் அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. எனினும் சென்னை மாவட்டத்தைப் பொருத்தவரை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகள், அவதூறு வழக்குகள், சிபிஐ தொடர்ந்த வழக்குகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன.
இதன் காரணமாக, இந்த வழக்குகளை விசாரிக்க சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடுதலாக இரண்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இந்த நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் கருணாநிதி, ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த புதிய நீதிமன்றங்களை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹிலராமாணீ புதன்கிழமை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீகோத்தாரி, மணிக்குமார், அப்துல் குத்தூஸ், கோவிந்தராஜ், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார், சிபிஐ நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி, சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.