நீட்' தேர்வில் விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளிடமிருந்து வரப் பெற்ற வேண்டுதல்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
இது தொடர்பாக மக்களவை உறுப்பினர்கள் வே.வைத்திலிங்கம், ராஜேஷ்பாய் நரன்பாய் சௌடாஸமா, ஆ.ராசா, எம்.செல்வராஜ், மாணிக்கம் தாகூர் ஆகியோர் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷங்க் மக்களவையில் திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்த பதில் விவரம்:
மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் மருத்துவக் கல்வி வருகிறது. இளநிலை, முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்' தேர்வில் இருந்து தமிழகம், புதுச்சேரி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி இரு மாநில அரசுகளிடமிருந்து அமைச்சகத்திற்கு கோரிக்கை வந்துள்ளது. எனினும், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956, 10 டி பிரிவானது மருத்துவ சேர்க்கைக்கான நீட்' தேர்வை நடத்துவதற்குப் பரிந்துரைக்கிறது. மேற்கண்ட சட்டத்தின் பிரிவுகள் மாநிலங்களுக்கு விலக்கும், தளர்வும் இன்றி நாடு முழுவதும் பொருந்துகிறது. நீட்' தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.
அதே வேளையில், கூட்டு நுழைவுத் தேர்வு (பிரதானம்) ஆண்டுக்கு இருமுறை கணினி சார்ந்த தேர்வாக (சிபிடி) நடத்தப்படுகிறது. நீட்' தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி சிபிஎஸ்இ மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டது. நீட்' தேர்வில் தேர்ச்சி அடையாமல் போனதற்காக மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டதாக எந்தவிதத் தகவலும் இல்லை என மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அந்த பதிலில் அமைச்சர் போக்கிரியால் குறிப்பிட்டுள்ளார்.