கோட்டை அழகிரிநாதர் கோயில் உள்பட 8 கோயில்களில் ரூ.4.58 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் சோ.ராமச்சந்திரன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் சேவூர் சோ.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:
சேலம் கோட்டை அழகிரிநாதர் சுவாமி கோயிலில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலும், தருமபுரி நெருப்பூர் முத்தத்ராயசுவாமி கோயிலில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை உத்தமராயர் கோயிலில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டிலும், ஆரணி புத்திரகாமேஸ்வரர் கோயிலில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டிலும், செய்யாறு பச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோயிலில் ரூ.47.25 லட்சம் மதிப்பீட்டிலும், திருவத்திபுரம் வேதபுரீஸ்வரர் கோயிலில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டிலும், பொள்ளாச்சி நித்தீஸ்வரசுவாமி கோயிலில் ரூ.63.70 லட்சம் மதிப்பீட்டிலும், கிணத்துக்கடவு சென்றாம்பாளையம் சென்றாயசுவாமி கோயிலில் ரூ.45.60 லட்சம் மதிப்பீட்டிலும் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
அருணகிரிநாதர் புகழைப் போற்றும் வகையில் திருவண்ணாமலையில் மணிமண்டபம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் ராவுத்தநல்லூர் கோயில் முன்மண்டபம் ஆகியவை ரூ.1.37 கோடியில் கட்டப்படும் என்றார்.