தமிழகத்தில் திங்கள்கிழமை 12 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கும் மேல் பதிவானது. அதிகபட்சமாக, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், மதுரை விமானநிலையம், பரங்கிபேட்டையில் தலா 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. கடலூரில் 104 டிகிரி, திருச்சி, வேலூரில் தலா 103 டிகிரி, நாகப்பட்டினம், திருத்தணி, தூத்துக்குடியில் தலா 102 டிகிரி, பாளையங்கோட்டையில் 101 டிகிரி, அதிராமபட்டினத்தில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்கு அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது:
தென்மேற்குப் பருவமழை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேநேரத்தில், தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை, புதன் ஆகிய இருநாள்கள் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. மதுரை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி, ராமநாதபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.
பருவமழை: மத்திய அரபிக்கடலில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 முதல் 5 நாள்களில் பருவமழை தீவிரமடைய சாதகமான சூழல் உள்ளது. மத்திய அந்தமான் கடலில் பருவமழை மிதமாக வலுவடைந்து வருகிறது.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் 20 மி.மீ. மழை பதிவானது.