சென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் 'திடீர்' விசாரணை
சென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் செவ்வாயன்று 'திடீர்' விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் செவ்வாயன்று 'திடீர்' விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மதகுரு ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தேசிய விசாரணை ஆணைய (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த 12-ந்தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை வந்தனர். அவர்கள் கோவை உக்கடம் பகுதியில் 7 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி தோட்டாக்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், ஷாஜகான்( 25), முகமது உசேன்(25) மற்றும் ஷேக் சபியுல்லா (36) ஆகிய 3 பேரின் வீடுகளில் கோவை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ஐ.எஸ். ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபணமானது. இதைத்தொடர்ந்து அவர்கள் மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்
இந்நிலையில் கோவையில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து கடந்த வாரம் மதுரையிலும் தேசிய விசாரணை ஆணைய (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சதகதுல்லா என்ற இளைஞரை ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னை புழல் சிறையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் செவ்வாயன்று 'திடீர்' விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிலால் மாலிக், பண்ணா இஸ்மாயில் மற்றும் 'போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை மற்றும் மதுரையில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் விசாரணையைத் தொடர்ந்து தற்போது புழல் சிறையில் விசாரணை நடந்து வருகிறது.