தமிழ்நாடு

பறவைகளும் பசுக்களும் எனது தோழர்கள்! ஒருங்கிணைந்த பண்ணையில் கோழி, காளை, குதிரை வளர்ப்பில் இளைஞர் ஆர்வம்

இயற்கை சார்ந்த உறவுகள் பல நம்மை விட்டுப் பிரிந்து போகும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது.

எம்.மாரியப்பன்

இயற்கை சார்ந்த உறவுகள் பல நம்மை விட்டுப் பிரிந்து போகும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது.  40, 50 ஆண்டுகளுக்கு முன்,  படித்தவரானாலும், பாமரரானாலும் கால்நடை வளர்ப்பும்,  விவசாயமுமே அவர்களின் பிரதானத் தொழிலாகவும், பொழுதுபோக்காகவும் இருந்தது.  

உடல் ஆரோக்கியமாக இருந்தது மட்டுமின்றி,  மனமும் மகிழ்ச்சியாக இருந்தது. நவீன உலகம் இயற்கையில் இருந்து பிரிக்கும் சூழலை உருவாக்கி விட்டது. ஆனால்,  எத்தனை காலமானாலும், பறவைகளும், பசுக்களுமே எனது தோழர்கள். தந்தை விட்டுச் சென்ற ப(ணியை)ண்ணையைப்  பாதுகாப்பது தான் எனது கடமை என்கிறார்,  நாமக்கல் அருகே மேட்டுப்பட்டி ஊராட்சி ஊத்துவாரி கிராமத்தைச் சேர்ந்த வி.வீராவரதராஜன்(40). 

அவர் கூறியது;  எனது தந்தை வரதராஜன்,  சில ஆண்டுகளுக்கு முன் காலமாகி விட்டார்.  இந்த ஊத்துவாரி பகுதியில் சுமார் 17 ஏக்கர் பரப்பில், அவரது பெயரில் ஒருங்கிணைந்த பண்ணையை அமைத்தார்.  அது தான் உலகம் என்றே வாழ்ந்தார்.  எனது மனைவி ரோஜா, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞராக உள்ளார்.  எனது தந்தை மறைவுக்குப் பின் இந்தப் பண்ணையைக் கவனித்து வருகிறேன்.  

ஆடு வளர்ப்பும், மாடு வளர்ப்பும் இப்போதெல்லாம் வெகுவாகக் குறைந்து விட்டது.  அதற்கான தீவனச் செலவு, பராமரிப்பு போன்றவற்றால் அவற்றை வளர்ப்பதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுவதில்லை.  சிறு வயது முதலே பண்ணைக்கும், எனக்குமான நெருக்கம் அதிகம்.  இந்தப் பண்ணையைப் பொருத்தவரை,  பசு மாடுகள்,  காளைகள்,  குதிரைகள்,  புறாக்கள், வான்கோழிகள்,  நாட்டுக் கோழிகள், ஆடுகள் உள்ளிட்டவை இருக்கின்றன.

இதில், காங்கேயம் பகுதியைச் சேர்ந்த காரி, மயில,  செவலப் பசுக்களும்,  அதே வகையில் காளைகளும் 30-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன.  20-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகள் உள்ளன. குதிரைகளைப் பொருத்தவரை, பஞ்சாப்பில் இருந்து வாங்கி வந்தேன். தற்போது 3 குதிரைகள் உள்ளன. அவற்றை பள்ளிகளுக்குக் கொண்டு சென்று மாணவ, மாணவியருக்கு குதிரையேற்றப் பயிற்சி வழங்குவதற்கான முயற்சியை எடுத்து வருகிறேன்.  

நாட்டுக் கோழிகள் ஆயிரத்துக்கும் மேல்  உள்ளன.  அசில் வகை எனப்படும் கட்டு சேவல்கள் உள்ளன.  நாட்டுக் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்வது இல்லை.  ஒரு முட்டை ரூ.15 என்ற விலையில் வெளிச்சந்தையில் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறேன்.  30 எண்ணிக்கை கொண்ட ஓர் அட்டை முட்டை ரூ.450 எனக் கொடுக்கிறேன்.  நாமக்கல், சேலம் பகுதியில் உள்ள மளிகை வியாபாரிகள் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

இந்த முட்டைகள் மருத்துவ குணமிக்கது.  இதுமட்டுமின்றி, நாட்டு மாட்டுப்பால் ஒரு லிட்டர் ரூ.100 என்ற விலையில் விற்பனையாகிறது. இதையும் வியாபாரிகள் மொத்தமாக வந்து வாங்கிச் செல்கின்றனர். இப் பண்ணையிலேயே பசு நெய் உற்பத்தி செய்கிறோம். ஒரு கிலோ பாட்டில் ரூ.1,800 வரை போகிறது. இவை தவிர,  500-க்கு மேற்பட்ட புறாக்கள் உள்ளன.  இறைச்சிக்காக வளர்க்கப்படும் இவை முடி வளர்வதற்கு முன்பாக ரூ.250 என்ற விலையிலும், வளர்ந்த பின் அதிக தீவனம் எடுக்கும் சூழலில் ரூ.350 என விற்பனை செய்கிறேன்.  

ரூ.250 விலையில் உள்ள புறாக்கள் வளர்ப்புக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்.  இறைச்சிக்கு உதவாது. 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன.  இவை உயிருடன் கிலோ  ரூ.280 எனக் கணக்கிட்டு,  இருக்கும் எடைக்கு தகுந்தாற்போல் விலையை நிர்ணயிக்கிறோம்.  வான் கோழிகள் 10 எண்ணிக்கையில் உள்ளன.  பறவைகளையும்,  பசுக்கைளயும் தினமும் பண்ணையில் வந்து பார்ப்பதும், பழகுவதும்தான் எனக்கான நிம்மதி என்றார். 

நாட்டுக்கோழி வளர்ப்பில் சாதனை படைத்தமைக்காக, கடந்த 2018-ஆம் ஆண்டு, நாமக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,  சிறந்த விவசாயிக்கான விருதை வழங்கி இவரை கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT