தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலம் நடத்தப்பட்ட கோடை காலப் பயிற்சியின் போது பொதுமக்களிடம் சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்களுக்கு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி சான்றிதழ்களை வழங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தமிழ்நாடு சூரிய எரிசக்தி கொள்கை -2012 வெளியிடப்பட்டது. அதில் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் சூரிய மேற்கூரை அமைப்புகள் மூலம் 350 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டினை அதிகரிக்கவும், பொது மக்களிடையே மரபுசாரா எரிசக்தியின் பயன்பாட்டினை கொண்டு செல்லும் நோக்கில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை டெடா சோலார் வீரர்கள்' என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விடுமுறையின் போது பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் பகுதியாக இந்த ஆண்டு பயிற்சி பெற்ற 442 மாணவர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, நிறுவனங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் 421 கூட்டுத் திறன் கொண்ட 49 சூரிய மேற்கூரை அமைப்புகளை நிறுவிட உறுதுணையாக இருந்தனர். சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று, சிறப்பாக செயல்பட்ட 6 மாணவர்கள், 4 மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் விக்ரம் கபூர், கழக இணை மேலாண்மை இயக்குநர் சுபோத் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.