சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வலியுறுத்தி அடுத்த வாரம் போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
வழக்குரைஞர்கள் சமூக நீதிப் பேரவையின் மாநில பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராமதாஸ் பேசியதாவது: இளவரசன் விவகாரத்தில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டது குறித்து செய்தி வெளியிடாத ஊடகங்கள், இளவரசன் மரணத்தில் பாமக மீது பழிபோடுகின்றன. அதே நேரம், திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் பொய்களை ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன.
வழக்குரைஞர்கள் சமூக நீதிப் பேரவை, ஆர்எஸ்எஸ் அமைப்பைப் போல செயல்பட வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதை வலியுறுத்தி பாமக சார்பில் அடுத்த வாரம் போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர். நிகழ்ச்சியில் முன்னதாகப் பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, மக்களவைத் தேர்தலுக்குப் பின்பும் ஸ்டாலின் பகல் கனவு கண்டுவருகிறார். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், நீட் போன்ற பிரச்னைகள் உருவாக திமுகதான் காரணம்.
மக்களவைத் தேர்தலில் பாமக தோல்வியடைய ஊடகங்களும் முக்கியக் காரணம். எங்களை எதிர்த்துப் பேசினால்தான் திருமாவளவனுக்கு அரசியல் வாழ்க்கை கிடைக்கும் என்றார் அவர்.