அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனாவுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னை கிண்டியில் எஸ்.கே கண்ணன் என்பவருக்கு தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் இடம் ஒதுக்கீடு செய்தது. இந்த இடத்தை முன்னாள் மேயரும், திமுக எம்.எல்.ஏவுமான மா.சுப்பிரமணியன், தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றம் செய்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி எம்எல்ஏ மா.சுப்பிரமணியனும், அவரது மனைவி காஞ்சனாவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதே போல் புகார்தாரரான பார்த்திபனும் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கு விசாரணைக்குத் தேவைப்படும் போது இருவரும் ஆஜராக வேண்டும். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருவரும் தலா ரூ.10 ஆயிரத்துக்கு இருநபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மேலும் போலீஸாரின் விசாரணைக்கு இடையூறு செய்யவோ, சாட்சிகளைக் கலைக்கவோ கூடாது என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனாவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.