தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: குமரிக்கடலில் இருந்து ராயலசீமா வழியாக உள்தமிழகம் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் 40 மி.மீ., விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் 20 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடி, சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம், ஏற்காட்டில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றார் அவர்.
2 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை மிதமான வெப்பநிலை காணப்பட்டது. சில இடங்களில் வெயில் கொளுத்தியது. குறிப்பாக, இரண்டு இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரி, மதுரையில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.