முகப்பு
தமிழ்நாடு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: மே 13-இல் சசிகலாவை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு 

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், வரும் மே 13-இல் சசிகலாவை ஆஜர் படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 2 மே 2019, 5:24 pm IST
பகிர்:

சென்னை: அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், வரும் மே 13-இல் சசிகலாவை ஆஜர் படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெ.ஜெ. தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து எலெக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கப் பிரிவினர் எழும்பூர் நீதிமன்றத்தில் அந்நியச் செலாவணி மோசடி வழக்குத் தொடர்ந்தனர்.

இதுதொடர்பாக சசிகலா மீது மேலும்  3 வழக்குகள் தொடரப்பட்டன. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று தற்போது கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ளதால், அந்நியச் செலாவணி வழக்கில் காணொலிக் காட்சி மூலம் அவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  இரண்டு வழக்குகளில் சசிகலா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், எஞ்சிய இரண்டு வழக்குகளின் விசாரணை எழும்பூர்  நீதிமன்ற நீதிபதி மலர்மதி முன் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி சாரணைக்கு வந்தது. அப்போது, அப்போது பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா காணொலிக் காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரிடம் கேள்விகளை எழுப்பி நீதிபதி மலர்மதி குற்றச்சாட்டுப் பதிவு செய்தார். அப்போது சசிகலா தன் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யாக புனையப்பட்டவை என்றார். மேலும்,  அரசுத் தரப்பு சாட்சிகளைத்  தனது தரப்பில் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். 

இதையடுத்து,  அரசுத் தரப்பு சாட்சிகளை சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணை செய்ய அனுமதியளித்து, விசாரணையை நீதிபதி மலர்மதி ஒத்திவைத்தார்.அதன்பிறகு சாட்சிகளின் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் அந்நியச் செலாவணி மோசடி வழக்கில், வரும் மே 13-இல் சசிகலாவை ஆஜர் படுத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக எழும்பூர் நீதிமன்றம் வியாழனன்று பிறப்பித்த உத்தரவில் சசிகலாவை மே 13-இல் நேரில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும், அப்போது சாட்சிகள் தெரிவித்த விபரங்கள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான உத்தரவை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகளுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம் இந்த வழக்கில் முன்பு செய்ததைப் போன்று காணொலிக் காட்சி மூலம் ஆஜராக அனுமதி கோரி சசிகலா மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.