லக்னௌ: தேர்தல் பிரசாரம் செய்யப் போன இடத்தில் கருநாகத்தோடு பிரியங்கா காந்தி சகஜமாக விளையாடியதைக் கண்ட காங்கிரஸ் தொண்டர்கள் பயத்தில் உறைந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் ரே பரேலி தொகுதியில் போட்டியிடும் தனது தாயார் சோனியா காந்திக்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக அவர் வியாழனன்று ஹன்சா க பூர்வா கிராமத்திற்குச் சென்றார். பாம்புப் பிடாரரகள் அதிகமாக வசிக்கும் பகுதிக்குச் சென்ற பிரியங்கா, பாம்புகளை கையில் வைத்திருந்த அவர்களுடன் உரையாடினார்.
அப்போது வெகு எதார்த்தமாக அவர்கள் கையில் வைத்திருந்த கருநாகம் ஒன்றைப் பிடித்து விளையாடிய அவர், அதை கூடையில் இட்டார். அருகிலிருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் பயத்தில் உறைந்தனர். ஆனால ஒருவருக்கும் முன்னேறிச் சென்று தடுக்கும் தைரியம் இல்லை.
இதுதொடர்பாக கிஷோரி லால் என்னும் பாம்புப் பிடாரர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் கிராமத்திற்கு ஒரு பெரிய அரசியல் தலைவர் வருவது இதுவே முதல்முறையாகும். அத்துடன் நாகம் ஒன்றினைத் தொட்டுத் தூக்குவதும் இதுவே முதல்முறையாகும். பொதுவாக யாரேனும் அரசியல் தலைவர் முன்னிலையில் நாங்கள் நாகத்தைக் காட்டினால் அது பணத்திற்காகக்தான் என்று அவர்கள் நினைப்பார்கள். ஆனால் பிரியங்காவோ கொஞ்சம் கூட பயப்படாமல் அதை ஒரு நாய்க்குட்டியைக் கையாளுவதைப் போன்று விளையாடினார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.