பொறியியல் கலந்தாய்வுக்கான ஆன்-லைன் பதிவு வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும்.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டு முதல் ஆன்-லைனில் நடத்தப்பட்டு வருகிறது. 2017 -ஆம் ஆண்டிலேயே, ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு அறிமுகம் செய்யப்பட்ட போதும், கலந்தாய்வு முழுவதும் ஆன்-லைனில் நடத்துவது 2018 -ஆம் ஆண்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் நடத்துகிறது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை தொடங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே மாணவர்கள் ஆர்வமுடன், பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவை செய்து வருகின்றனர். சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் கலந்தாய்வு உதவி மையத்தில் 28 பேர் விண்ணப்பத்தைப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் விவேகானந்தன் கூறியது: ஆன்-லைன் விண்ணப்பப் பதிவின் முதல் நாளான வியாழக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி 15,168 பேர் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 5,121 பேர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளனர் என்றார்.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்காகும். கடந்த 2018 -ஆம் ஆண்டில் ஆன்-லைன் விண்ணப்பப் பதிவின் முதல் நாள் இரவு 8 மணி வரையில் 7,420 பேர் மட்டுமே ஆன்-லைனில் விவரங்களைப் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.