புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஸா மாநிலத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புயலால் ஒடிஸா மாநிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புனித நகரமான புரி, கடும் சேதத்தைச் சந்தித்துள்ளது. புயலைத் தொடர்ந்து அங்கு பெய்த கனமழை காரணமாகவும், அந்த மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை சீற்றத்தினால் ஒடிஸாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பிலும், மக்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது, உடனடி மீட்புப் பணிகளை மேற்கொள்வது, மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது போன்ற மிகப் பெரிய சவால்களை ஒடிஸா அரசு எதிர்கொண்டுள்ளது.
இத்தகைய சூழலில், தமிழக அரசு மற்றும் மக்களின் சார்பில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடி பங்களிப்பாக ரூ. 10 கோடி நிதியை ஒடிஸா அரசுக்கு அளிக்குமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதுதவிர, ஒடிஸா அரசுக்குத் தேவையான பிற உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என முதல்வர் தெரிவித்துள்ளார்.