மதுரையில் "நீட்' தேர்வு எழுதிவிட்டு பேருந்தில் சொந்த ஊருக்குத் திரும்பிய போது மயங்கி விழுந்து மாற்றுத்திறனாளி மாணவி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் சந்தியா (17). மாற்றுத்திறனாளி ஆவார். இவர் "நீட்' தேர்வு எழுதுவதற்காக மதுரையில் உள்ள தனியார் பள்ளிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தார். தேர்வு முடித்துவிட்டு மாலையில் பேருந்தில் ராமநாதபுரம் புறப்பட்டார். திருப்புவனம் அருகே பேருந்து சென்றபோது மாணவி மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக அவரை பேருந்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள்அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். "நீட்' தேர்வு எழுதிவிட்டு திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.