தமிழ்நாடு

துப்பட்டாவுக்கும், கையில் கட்டும் சாமி கயிறுக்கும் தடை: எங்கு தெரியுமா? (புகைப்படங்கள்)

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை, தமிழகத்தில் 1.34 லட்சம் பேர் எழுதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ENS

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை, தமிழகத்தில் 1.34 லட்சம் பேர் எழுதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரு ஆண்டுகளாக நீட் தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வந்தநிலையில், இந்த ஆண்டு தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வை நடத்தியது.

இந்த நிலையில், நாடு முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் சென்னை, சேலம், கோயம்புத்தூர் உள்பட 14 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சென்னையைப் பொருத்தவரை மயிலாப்பூர், கே.கே.நகர், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் 31 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பிற்பகல் 2 மணிக்குத் தேர்வு தொடங்கியது. வழக்கம்போலவே இந்த ஆண்டும் கடுமையான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் விதிக்கப்பட்டிருந்தன.

கெடுபிடிகள் குறித்து கடந்த ஆண்டு செய்திகள் வெளியானதால் இந்த முறை ஒரு சில மாணவ, மாணவிகள் சரியான ஆடைக்கட்டுப்பாட்டுடன் வந்திருந்ததனர். எனினும் சில சின்ன சின்ன விஷயங்களைக் கூட தேர்வுக் கூட பார்வையாளர்கள் கவனித்தது குறிப்பிடத்தக்க விஷயமாக இருந்தது.

அதாவது மாணவிகள் துப்பட்டா அணியக் கூடாது என்றதும்,கையில் சாமி கயிறு அணிந்திருந்தவர்களை அனுமதிக்காமல் அதனை அகற்றிய பிறகே அனுமதித்ததும் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.

தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படும் முன்னர் தீவிர சோதனைக்கு மாணவர்கள் உள்படுத்தப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலமாகவும் சில இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கம்மல், மூக்குத்தி உள்ளிட்ட நகைகள் அணிந்து வந்த மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. அவற்றை கழற்றிய பிறகே தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டது.

பாஸ்போர்ட், ஆதார், பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஓர் அசல் ஆவணத்தைக் காண்பிக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன் பின்னர், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டுகள் சரிபார்க்கப்பட்டன. தேர்வுக் கூடத்தில் உதவியாளர்களை அழைத்து வரத் தகுதியுள்ள சலுகை பெறும் மாற்றுத்திறனாளிகள், அதற்குரிய அனுமதி சான்றுகளை காண்பித்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக, முழுக்கைச் சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டையின் முழங்கைப் பகுதி கத்தரிக்கப்பட்டது. அதேபோன்று, ஷூ அணிந்து வந்தவர்களுக்கு தேர்வுக் கூடத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. மாணவர்களுக்கு தேர்வுக் கூடத்திலேயே பேனா வழங்கப்பட்டதால் சொந்தமாக பேனாக்களைக்கூட எடுத்துச் செல்ல முடியவில்லை. பர்ஸ், பெல்ட், தொப்பி, கைக் கடிகாரம், செல்லிடப்பேசிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தேர்வை எழுதினர். கடந்த இரு ஆண்டுகளைப் போல இம்முறை பெரிய அளவிலான சர்ச்சைகளோ அல்லது சச்சரவுகளோ இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது.

எளிமையான வினாக்கள்
 நீட் தேர்வு இம்முறை எளிமையாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வினாக்கள் சற்று எளிமையாக இருந்ததாக அவர்கள் கூறினர்.

தேர்வெழுதிய மாணவர்கள் மேலும் கூறியதாவது: நாங்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீட் தேர்வுக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தோம். அதன் பயனாக இந்த முறை வினாக்கள் அனைத்துக்கும் எங்களால் பதிலளிக்க முடிந்தது என்றனர்.

முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தற்போது ஒடிஸாவை தவிர பிற மாநிலங்களில் நீட் தேர்வு முடிந்தது. ஒடிஸாவில் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகே அங்கு தேர்வை நடத்தக் கூடிய நிலை உள்ளது. அதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகலாம். எனவே, திட்டமிட்டபடி முடிவுகளை வெளியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT