தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவர்கள் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில், அந்தந்த மாவட்டத் தலைமை அலுவலங்களில் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத நிலையில், வருகிற டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுக விருப்ப மனு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில், அந்தந்த மாவட்டத் தலைமை அலுவலங்களில் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தலைமை அலுவலங்களில் விநியோகிக்கப்படும்.
மேலும், ஒவ்வொரு பதவிகளுக்குமான விருப்ப மனு கட்டணத் தொகை பின்வருமாறு:
மாநகராட்சி மேயர் - ரூ.25,000
மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் - ரூ.5,000
நகர மன்றத் தலைவர் - ரூ. 10,000
நகர மன்ற வார்டு உறுப்பினர் - ரூ. 2,500
பேரூராட்சி மன்றத் தலைவர் - ரூ. 5,000
பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் - ரூ. 1,500
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் - ரூ. 5,000
ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் - ரூ. 3,000
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.