முகப்பு
தமிழ்நாடு

சாதிய கொலை வழக்கில் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலையால் எழும் கேள்விகள்!

விடுதலை செய்ய வேண்டியவர்களை விட்டுவிட்டு கொலையாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Updated On : 11 நவம்பர், 2019 at 5:50 PM
கொலை வழக்கு
பகிர்:

விடுதலை செய்ய வேண்டியவர்களை விட்டுவிட்டு கொலையாளிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

மேலவளவு ஊராட்சித் தலைவராக இருந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த 13 பேர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலவளவில் இருபது ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தையே உலுக்கிய சாதிய கொலைச் சம்பவம் நடந்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உச்ச நீதிமன்றம் வரை அப்பீல் செய்தும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்தனர்.

Advertisement

பத்து வருட காலமாக தண்டனை அனுபவித்து வந்த இவர்களை எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று மேலூர் தொகுதி அ.தி.மு.க, எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் கோரிக்கை வைத்தார்.

விடுதலை செய்யக் கூடாது என்று தலித் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் 13 பேரையும் விடுதலை செய்ய அரசால் உத்தரவிடப்பட்டு கடந்த 9-ம் தேதி அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளிவந்த பரபரப்புக்கிடையில் சின்ன ஓடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், ராமர், சர்க்கரை மூர்த்தி, ஆண்டிசாமி ஆகியோர் மதுரை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

இதன் மூலம் இனி பட்டியல் சமூகத்தினரை சாதி ஆணவத்தால் கொலை செய்துவிட்டு பத்து வருடங்களில் வெளியில் வந்து விடலாம் என்ற எண்ணமே மேலோங்கும். 

இதற்கு அரசே துணைபோகலாமா ? என்ற கேள்வியே எழுந்துள்ளது.

விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எந்த அடிப்படையில் நன்னடத்தை விதிகளை கணக்கிட்டார்கள் என்று தெரியவில்லை. SC/ST (பிரிவு 19 & 20 ) குற்றவாளிகளுக்கு நன்னடத்தைச் சட்டம் பொருந்தாது.

தமிழக மக்கள் பல ஆண்டுகாலமாக 7 பேரின் விடுதலையை எதிர்நோக்கியிருக்கும் நிலையில், இப்படி எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு கொலையாளிகள் முன்கூட்டியே விடுதலையாகியிருப்பது மக்களிடையே கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.