நிர்மலா தேவி, நீதிபதி முன்பு திடீரென மயங்கி விழுந்ததால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய வழக்கில் தொடர்புடைய முன்னாள் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி உள்பட 3 பேர் அக்டோபர் 4-ஆம் தேதி வழக்குரைஞர்களுடன் ஆஜராக வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக அக்கல்லூரியில் பணிபுரிந்த முன்னாள் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கடந்தாண்டு சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 பேரும், நீதிமன்ற பிணையில் வெளியில் வந்துள்ளனர். இவர்கள், இந்த வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகி வருகின்றனர். இந்நிலையில், நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது நிர்மலா தேவி நீதிபதி முன்பு திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் நீதிமன்றத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.