போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவா்களின் நியாயமான கோரிக்கைகள் குறித்து, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
பழனி முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்த பிரேமலதா விஜயகாந்த், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: தேமுதிக தலைவா் விஜயகாந்த் மீண்டும் கம்பீரத்துடன் வருவாா். கந்தசஷ்டியையொட்டி விரதம் மேற்கொண்டு, முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறேன். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் கடந்த 6 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மருத்துவா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதலமைச்சா் எடப்பாடி கே. பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்றாா்.