சென்னை: ஆண்டவருக்கும் தில்லியை ஆண்டு கொண்டிருப்பவருக்கும் நன்றி என்று நெகிழ்ச்சியில் கண்கலங்கி தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் (செப்.1-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமையன்று நியமிக்கப்பட்டார். தெலங்கானா மற்றும் ஆந்திராவின் ஒருங்கிணைந்த ஆளுநராக நரசிம்மன் செயல்பட்டு வந்த நிலையில், தமிழிசை தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆண்டவருக்கும் தில்லியை ஆண்டு கொண்டிருப்பவருக்கும் நன்றி என்று நெகிழ்ச்சியில் கண்கலங்கி தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எப்போதும் போல் என் மீது அன்பு செலுத்தி இங்கு வந்துள்ள ஊடக நண்பர்களுக்கு நன்றி.
எதிர்பாராத நேரத்தில் இந்த பதவி எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
கடின உழைப்புக்கு பாஜக எப்போதுமே நிச்சயம் அங்கீகாரம் தரும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஆகியோர் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
இதற்காக அவர்களுக்கும் பாஜ செயல் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கும் நன்றி.
தமிழக பாஜக தொண்டர்கள் மற்றும் அனைவருக்கும் நான் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்
ஆண்டவருக்கும் தில்லியை ஆண்டு கொண்டிருப்பவருக்கும் நன்றி
என் மீது அன்பும் நம்பிக்கையும் வைத்து பிரதமர் மோடி இந்த பொறுப்பை அளித்துள்ளார்.
எல்லோரும் ஒரே நாடு என்ற எண்ணத்துடனே நான் தெலங்கானா செல்கிறேன்; என்றுமே தமிழக மக்களுக்கு நான் சகோதரி தான்
நான் ஏற்றுக்கொண்ட பாதைக்காக காங்கிரஸ் தலைவரான என் அப்பாவை விட்டுக் கொடுக்க நேந்தது.
இந்த வயதில் இந்த உயரிய பதவி என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று.
சமீபத்தில் தமிழகத்தில் பாஜகவிற்கு 44 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து விட்ட திருப்தியில் ஒரு தொண்டராக நான் செல்கிறேன்.
இவ்வாறு பேசிய அவர் உணர்ச்சிமிகுதியில் நெகிழ்ந்து கண்ணீர் மல்கப் பேசினார்.