சென்னை: கடலூரில் 9 பேருக்கு டெங்கு பாதித்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையிலும் டெங்குக் காய்ச்சல் பரவி வருகிறது.
டெங்கு கொசு பரவும் வழிகள் குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் ஜெயந்தி பேசுகையில், சென்னையில் நாள்தோறும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளோடு 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். காய்ச்சல் பாதிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எனவே பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி வந்ததும் சுயமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், தொடர் காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு வந்து ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் டீன் வலியுறுத்தியுள்ளார்.