சென்னை: பவர் கிரீட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடி சிறையிலடைக்கப்பட்டுள்ள திருப்பூர் விவசாய கூட்டு இயக்க தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் செவ்வாயன்று பதிவிட்டுள்ளதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் விவசாய நிலங்களில் பவர் கிரீட் நிறுவனம் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்துப் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து துணை நின்ற கூட்டு இயக்க தலைவர்களை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
நில உரிமையாளர்களின் அனுமதி பெறாமல், எவ்வித முன்னறிவிப்புமின்றி, காவல்துறை உதவியுடன் பவர் கிரீட் நிறுவனம் இப்படியொரு அராஜக செயலில் ஈடுபட்டு விளை நிலங்களை பாழ்படுத்த முயற்சித்திருப்பதும்,அதிமுக அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டிருப்பதும் மிகுந்த வேதனை அளிக்கிறது. கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கூட்டு இயக்க தலைவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் முன்பு பவர்கிரிட் நிறுவனமும் தமிழக அரசும் விவசாயிகளின் கருத்தை கேட்பதோடு, நில உரிமையாளர்களின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.