பிரபல நாவலாசிரியர் சேலம் மகரிஷி வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.
சேலத்தைச் சேர்ந்த மகரிஷியின் இயற்பெயர் டி.கே. பாலசுப்பிரமணியம் (87). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மா ஓய்வு பெற்ற நூலகர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். வயது மூப்பின் காரணமாக வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். இவரது உடல் ஜான்சன்பேட்டையில் உள்ள காக்காயன் மயானத்தில் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது. தொடர்புக்கு- 9789491711.
220 நாவல்களை எழுதியவர்...: இவரது முதல் நாவல் "பனிமலை' வெளிவந்து சில ஆண்டுகளில் அதை 1965-இல் "என்னதான் முடிவு' என்று திரைப்படமாக வெளிவந்தது. மேலும், இவர் எழுதிய பத்ரகாளி (1976), சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு (1977), புவனா ஒரு கேள்விக்குறி (1977), வட்டத்துக்குள் சதுரம் (1978) மற்றும் நதியை தேடி வந்த கடல் (1980) ஆகியவை திரைப்படங்களாக வெளிவந்தன.
என்னதான் முடிவு படத்துக்காக சிறந்த கதாசிரியர் விருதை, எம்.ஜி.ஆரிடம் இருந்து பெற்றவர். இவர் 220-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். 5 சிறுகதைத் தொகுப்புகள், 60 கட்டுரை நூல்களை எழுதியுள்ளார். எழுத்துச் சித்தர் விருது, சேலத்து செம்மல் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.