மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால், நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் மின் நிலையங்களில் திறக்கப்பட்ட தண்ணீர் போக மீதம் உள்ள தண்ணீர் மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.
தற்போது காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 19 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனால் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 18 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் இருந்தது.